காரைக்குடியில் 51.56 லட்சம் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வந்த மதுரையைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் மற்றும் இவரது நண்பர் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய்களை மாற்றுவதற்காக, காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரைத் தேடி காரில் வந்துள்ளனர்.
இது குறித்த ரகசிய தகவலின்பேரில், காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முத்தூரணி பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், ரூ. 51 லட்சத்து 56 ஆயிரம் செல்லாத பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், உதயகுமார், கார்த்திகேயன் மற்றும் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசாமி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன், கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த வரதராஜன், கிஷோர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இவர்களில், வரதராஜன் என்பவர் காரைக்குடி அருகேயுள்ள கல்லூரியில் உடற்கல்வித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.