சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
மடப்புரம் காளியம்மன் கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, ஜூன் மாதம் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இவ் விழாவில், கோயில் முகப்புப் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், பாஸ்கரன், கமலசிகாமணி உள்பட கிராமத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா செய்திருந்தார்.