சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு மதுக்கடை திறக்க முடிவு செய்து, அங்குள்ள கட்டடத்தில் மதுப்பாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இது குறித்து தகவலறிந்த வளநாடு கிராம மக்கள் இந்தக் கடையை முற்றுகையிட்டு, கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, இந்தக் கடையை திறக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர், இதே கடையின் வாயில் பகுதியை மட்டும் மாற்றி வைத்து, வியாழக்கிழமை மதுக்கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்தன. தகவலறிந்த வளநாடு கிராம மக்கள் மீண்டும் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், கடை திறக்கப்படவில்லை. கடை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்பதால், அந்த மதுக்கடை முன்பு கிராம மக்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.