சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி: வடிகால் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
சிவகங்கை-தொண்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பால சுரங்கப் பாதையில் மழை நீர் வெளியேற முறையான கட்டமைப்பு இல்லாததால், சிறிய மழைக்கு கூட அதிகளவு தண்ணீர் தேங்கி பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரயில்வே கடவுப்பாதையில் ரயில் கடந்து செல்லும் போது அந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் சாலையின் இரு வழி மார்க்கத்திலும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததின் பேரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மிகவும் மந்த நிலையில் நடைபெற்ற கட்டுமான பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், ராகினிப்பட்டி, ரயில் நிலையம், எம்.ஜி.ஆர்.காலனி, சூரக்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் ரயில்பாதையைக் கடந்து செல்லும் வகையில் பாலத்துக்கு அருகே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
இந்த சுரங்கப்பாதை தாழ்வான பகுதியியாக இருந்தபோதும் மழைநீர் வடிந்து செல்ல முறையான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலும் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி விடுவதால் அதன்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை நகராட்சி முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் கூறியது: இந்த சுரங்கப் பாதையில் அரசு அலுவலர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிள் சென்று வருகின்றனர். சுரங்கப் பாதையின் கட்டமைப்பு பணிகள் சரிவர அமைக்காததால் சிறிய மழைக்கே தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுரங்கப் பாதையில் தேங்கும் மழை நீரை வெளியற்ற வேண்டும் என்றார்.