சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கிருங்காக்கோட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இப் பேரணியை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (நேர்முக உதவியாளர்) அருள்மணி துவக்கி வைத்தார். பேரணியில், கிருங்காக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் டெங்கு குறித்த விழிப்புணர்வு பதாதைகளை கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஏந்திச் சென்றனர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் நபீஷாபானு, சித்த மருத்துவர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.