மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்கு உள்பட்ட இக் கோயிலில் அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் சம்பிரதாய பூஜைகள் முடிந்து  காலை 10.45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதன்பின் கொடிமரத்துக்கு தர்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு பலவகை தீபாரதனைகள் காட்டப்பட்டது. அதன்பின் அங்கு எழுந்தருளியிருந்த உற்சவர் ஆனந்தவல்லிஅம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. கோயில் சிவாச்சாரியார்கள் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். இந் நிகழ்ச்சியில் விழா மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்தவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவின்போது தினமும் இரவு கோயில் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளல் நடைபெற்று, அதன்பின் வீதி உலா வருதல் நடைபெறும். விழாவின் 9-ஆவது நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி அம்மன் ரதத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. ஆக. 4-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடித்தவசு விழா நடைபெறுகிறது.
 அன்று மாலை தவசு மண்டபத்துக்கு எழுந்தருளும் ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதர் சுவாமி விருஷாபரூடராகக் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆக.5-ஆம்  தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com