சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள வயிரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
நகரத்தார்களின் 9 நகர கோயில்களில் ஒன்றாக வயிரவன்கோயிலில், வடிவுடையம்மாள் சமேத வளரொளிநாதர் வயிரவசாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆடி முதல் நாள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் காலை தினமும் வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடும் இரவு சிம்ம வாகனம், காமதேனு வாகனம், அன்னவாகனம், கைலாசவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷபவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், முதலியவைகளில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன.
9- ஆம் திருவிழாவான புதன்கிழமை காலை 9.10 மணிக்கு திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 3.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு பிரகார வலம் வந்தது.
தொடர்ந்து 10 ஆம் திருநாளாக வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. 11 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் வயிரவ சாமி மகா அபிஷேகமும், மாலை 6.15 மணிக்கு திருக்கல்யாணமும் இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்து வருகின்றனர்.