சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனைல், அவை நான்கு ரோடு, பேருந்து நிலையம், அண்ணா சிலை, மார்க்கெட் பகுதி, பெரியகடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. உணவகங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்டு விட்டு, சாலைகளில் படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலை விபத்துகளும் நிகழ்கின்றன. சமீபத்தில், பேரூராட்சி டிராக்டர் மோதியதில் ஒரு பசு கன்றுக்குட்டி இறந்தது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.