சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொடர் மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி, தூதை, மழவராயனேந்தல், தஞ்சாக்கூர், மார்நாடு, சல்பனோடை, தாலிக்குளம், பத்துப்பட்டி, ஆனைக்குளம், குருந்தங்குளம், பழையனூர், அச்சங்குளம், அழகுடையான், சங்கங்குளம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், அன்றாடத் தேவைகளான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.