காரைக்குடியில் புதன்கிழமை உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சம்பை ஊற்று மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் ஊர்வலத்தை தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில் காரைக்குடி மு.வி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் சமூக பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கோவிலூர் சாலை, செக்காலைச் சாலை, நூறடிச்சாலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் சம்பை ஊற்று மற்றும் சமூகப்பாதுகாப்பு இயக்கத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்துப் பேசினார்.
இதில் பொருளாளர் மலைக்கள்ளர், விவசாயத்தொழிலாளர் சங்க நிர்வாகி ஆல்பர்ட், காரைக்குடி தொழில் வணிகக் கழக செயலாளர் சாமி. திராவிடமணி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.