சிவகங்கை அருகே மாணவரை தாக்கியதாக ஆசிரியர் மீது ஞாயிற்றுக்கிழமை மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒக்கூரைச் சேர்ந்தவர் கருப்பையா(48). கூலித் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன்(13). அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி நேரத்தின் போது இவர் அடிக்கடி வகுப்பறையை விட்டு வெளியில் சென்றாராம். இதை பள்ளியின் ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது மாணவரை அவர் அடித்ததாக தெரிகிறது.
இதை மணிகண்டன் பெற்றோரிடம் கூறவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மணிகண்டனின் காது மற்றும் மூக்கில் ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து 108ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.