சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை புதன்கிழமை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
மானாமதுரை நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் அனுமதியில்லாமல் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் பதாகைகளை பார்த்தவாறு சென்றவர்கள் விபத்தில் சிக்கினர். இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் நகரில் காந்திசிலை, தேவர்சிலை, அண்ணா சிலை உள்ளிட்ட பல இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நாள்களாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றினர். அகற்றப்பட்ட பதாகைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.