சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சூறைக் காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் அச்சுக்கட்டுப் பகுதி, சிவகங்கை சாலை, காரைக்குடி சாலை, மேஸ்திரியார் தெரு, தென்மாபட்டு, கீழத்தெரு பகுதி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்ததில், 15-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனால் மின்தடை ஏற்பட்டு திருப்பத்தூர் நகர் இருளில் மூழ்கியது. உடனடியாக காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மின்வாரிய ஊழியர்கள் ஒரு சில இடங்களில் மரங்களை அகற்றி மின் இணைப்பை சரி செய்தனர். தென்மாபட்டு கீழத்தெரு பகுதியில் மரம் அகற்றப்படாததால் மின் கம்பங்கள் சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் மின்கம்பங்களை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமுற்ற பெண்கள் திருப்பத்தூர்- கண்டரமாணிக்கம் சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்து மின்விநியோகத்தை சீரமைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் நேரு மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் விநியோகத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.