சிவகங்கையில் வரும் நவ.18 ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அரங்கம் அமைக்கும் பணி மற்றும் கலைக் கல்லூரி வளாகத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் விழாவுக்கான மேடை, பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடும் அரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் அரங்கத்திற்கு வரும் வழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணியினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, சிவகங்கை மாவட்ட வருவாய் ஆய்வாளர் து.இளங்கோ, கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் காஞ்சனா, சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.