சிவகங்கை மாவட்டம் கல்லலில் புதன்கிழமை வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீது புகார் தெரிவித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கல்லல் வட்டார அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியமேரி தலைமை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் சித்ரா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் ஜெயராணி, மாவட்டப் பொருளாளர் தாமரைச் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், ஊழியர்களை கல்லல் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருமையில் இழிவாகப் பேசுவதாகவும், இரவு நேரங்களில் கால தாமதமாக ஆய்வு கூட்டங்களை நடத்துவதாகவும் குற்றம்சாட்டி அவரை பணியிட மாற்றம் செய்யுமாறு கோரி கோஷமிட்டனர்.
மேலும் அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,அனைத்து ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், கூடுதல் மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளையும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தமிழரசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் இளங்கோ, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில இணைச்செயலர் செல்வக்குமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு தொழிற்சங்க பொதுச் செயலர் கருணாநிதி, தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சின்னப்பன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலர் வீரையா ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.