சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக். 8, 22 ஆகிய இரு நாள்கள் வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் க.லதா, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுப் பேசியது: சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர்,மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,310 வாக்குச் சாவடிகள் உள்ளன.
அண்மையில்,நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3,456 ஆண் வாக்காளர்களும், 3,893 பெண் வாக்காளர்களும், 3 ஆம் பாலினத்தவர் 7 என 7,356 பேர் புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவைதவிர 2,040 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 814 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 885 பெண் வாக்காளர்களும், 3 ஆம் பாலினத்தவர் 47 என 11 லட்சத்து 9 ஆயிரத்து 746 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி நிலையங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் வைக்கப்படும்.
மேலும், 2018 ஜன.1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அக்.3 இல் தொடங்கப்பட்டுள்ளது.
அக்.31 வரை நடைபெற உள்ள இந்த பணிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரும் அக்.8, 22 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில்,சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விண்ணப்பிக்கலாம் என்றார்.
இதில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.