சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு, புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காளையார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டுக்கு, கட்சியின் காளையார்கோவில் ஒன்றியச் செயலர் எம். திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு. கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. கருப்புச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், காளையார்கோவில் தாலுகா மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம், பொட்டகவயல், நென்மேனி, கலசங்குடி, கண்ணகிபுரம், பெரியகண்ணணூர், புளியங்குளம் வழியாக மானாமதுரைக்கு நகரப் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. சலேயத்ராஜ் வரவேற்றார். மாநாட்டில் ஒன்றியச் செயலராக மு. திருநாவுக்கரசு தேர்வு செய்யப்பட்டார். ஒன்றியக் குழு உறுப்பினர்களாக உ. சீனிவாசன், ஏ. சலேயத்ராஜ், வி. திருமாறன், என். ஜோதிநாதன், எம். மெய்யப்பன், ராமகிருஷ்ணன், டி. சுதா, கே. முத்துராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, குமார் நன்றி கூறினார்.