"பொருள்களின் தரம் குறைந்தால் கட்செவி அஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்'

பண்டிகை கால விற்பனையின்போது, தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் பொருள்களின் தரம் குறைந்து

பண்டிகை கால விற்பனையின்போது, தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படும் பொருள்களின் தரம் குறைந்து காணப்பட்டால், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம்.
      இது குறித்து சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் வெளியிட்ட செய்திக்  குறிப்பு:
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார பண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
      இனிப்புகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
 பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விவரச் சீட்டு பொருத்தும்போது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும்.   
    மேலும், உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
  பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு தரச் சட்டம் 2006-இன் கீழ் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
    பொதுமக்களும் பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களில் முழு விவரங்கள் அடங்கிய விவரச் சீட்டு இருந்தால் மட்டுமே அவற்றை வாங்க வேண்டும்.
 வாங்கப்படும் பொருள்களில் வணிகம் செய்வதற்கான உரிம எண், பொருள்களின் விலை, தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரச்சீட்டு இல்லாமல் இருந்தாலோ அல்லது இது தொடர்பான வேறேதுனும் புகார்கள் இருப்பின், கட்செவி (வாட்ஸ்அப்) 94440-42322 எண்ணுக்கு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com