பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 283 பெண்கள் உள்பட 604 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.13 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் சிவகங்கை போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்து போகுமாறு அறுவுறுத்தினர்.
இதை ஏற்காத ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்தனர். ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 283 பெண்கள் உள்பட 604 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த 22 பெண்கள் உள்பட 85 பேரை போலீஸார் கைது செய்தனர். அனைவரையும் பின்னர் மாலையில் விடுவித்தனர்.