சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் புதன்கிழமை தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
காரையூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் க. லதா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற தூய்மையே சேவை எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று, குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார். அதையடுத்து, அங்கிருந்த அங்கன்வாடி குழந்தைகளிடம் கல்வி அறிவு பரிசோதனை மேற்கொண்டு, அம்மையத்தில் உள்ள உணவுப் பொருள்களையும் சோதனையிட்டார்.
தொடர்ந்து, ஊராட்சியில் காலி இடங்களில் உள்ள கருவேல மரங்களையும், குப்பை சேரும் இடங்களையும் அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரத்தைப் பேண கிராம மக்களிடம் வலியுறுத்தினார்.
ஆட்சியருடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், திருப்பத்தூர் வட்டாட்சியர் சுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இருந்தனர்.