மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப மாணவர்கள் தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மேலாண்மைப்புலம், அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இரு பிரிவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில் கலை மற்றும் மேலாண்மைப்புல மாணவ, மாணவியர்கள் 482 பேருக்கு துணைவேந்தர் சொ. சுப்பையா பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா பங்கேற்று பேசியது:
நாட்டின் முன்னேற்றத்துக்கு நற்பண்புகளுடைய குடிமக்களாக இருக்கவேண்டும். அதற்கு கல்வி மிகவும் அவசியம். கல்வியின் நோக்கம் சமுதாயத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்தரக்கூடிய குடிமக்களை உருவாக்குவதாகும். கல்வியை கற்றும் சமூக நலனில் அக்கறை இல்லாதவர்கள் இருந்தால் அதனால் ஒரு பயனுமில்லை.
படிப்பு என்பது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. படிப்பைவிட சிறந்த அணிகலன் வேறொன்றும் இல்லை. கடின உழைப்பு, விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும். மாணவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களது அறிவை மேம்படுத்தி, உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்றார்.
மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவ, மாணவியர்கள் 657 பேருக்கு துணைவேந்தர் சுப்பையா பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மிசோரம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ஆர்.எஸ். சாம்பசிவ ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
விழாவில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு வரவேற்றார். பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பி. சுபாஷ் சந்திரபோஸ், எஸ்.எம். ராமசாமி, எ. நாராயணமூர்த்தி, ஜெ.ஜெயகாந்தன், பேராசிரியர்கள், பல்கலைக்கழக தேர்வாணையர் எஸ். சக்திவேல், நிதி அலுவலர் (பொறுப்பு) டி.ஆர். குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.