வாஜ்பாய் மறைவு: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி ஊர்வலம்

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.   

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.   
     வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை மாலை காலமானார். இவரது மறைவையொட்டி, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  
    சிவகங்கையில் அனைத்துக் கட்சி சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில், பாஜகவின் தென் மண்டலத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன், அதிமுக சிவகங்கை நகரச் செயலர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றியச் செயலர் மதி, திமுக வழக்குரைஞர் அணியின் மாவட்டச் செயலர் அழகர்சாமி உள்பட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  
    சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் உள்ள ராமச்சந்திரா நினைவு பூங்கா முன்பாக தொடங்கிய  ஊர்வலமானது, காந்தி வீதி, மரக்கடை, தெற்கு ராஜரத வீதி வழியாக வந்து அரண்மனைவாசல் முன் நிறைவடைந்தது.  
காரைக்குடி
    பழைய பேருந்து நிலையத்திலிருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் தொடங்கி, கோவிலூர் சாலை, செக்காலைச் சாலை, நூறடி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தை அடைந்தது. கண்ணதாசன் மணிமண்டபம் அருகே வாஜ்பாய் உருவப் படத்துக்கு பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.    இதில், பாஜக மண்டலத் தலைவர் சந்திரன் தலைமையில், சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் இலுப்பக்குடி நாராயணன், மாவட்டப் பொருளாளர் வை. சந்திரசேகரன், காரைக்குடி நகர பாஜக பொதுச் செயலர் ஆர். பரமேஸ்வரன், பொருளாளர் தியாகராம், காரைக்குடி நகர முன்னாள் தலைவர் ஏ. நாகராஜன் உள்பட அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இருவர் மொட்டையடித்துக் கொண்டனர்.
திருப்பத்தூர்
    வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்குள்ள காந்தி சிலையிலிருந்து அண்ணா சிலை வரை மெளன ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், பாஜக நகரச் செயலர் விக்னேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலர் ராஜா, நகர இளைஞரணித் தலைவர் பரணி, செயலர் சுரேஷ் மற்றும் முன்னாள் மாநில வர்த்தக நியமிப்பாளர் சகாதேவன், வணிகப் பிரிவு மோகன், திமுக நகரச் செயலர் கார்த்திக், மதிமுக நகரச் செயலர் ராஜ்மோகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலர் ரஹீம், இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாண்டி, மணிகண்டன் மற்றும் ஜெய்ஹிந்த் வர்த்தக சங்கம், திருப்பத்தூர் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
    மேலும், பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாசை செலுத்தப்பட்டது.   இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், பூவந்தி, திருப்பாச்சேத்தி, மதகுபட்டி, கல்லல், நெற்குப்பை, சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக  கட்சியினர் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com