சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீரமுத்துப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கிராமத்தில் உள்ள லிங்கத்து அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இப்பந்தயம் நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலில் லிங்கத்து அய்யனார் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 13 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 16 வண்டிகளும் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை வீரமுத்துப்பட்டி, காளையார்கோவில், கொல்லங்குடி, அரியாகுறிச்சி, கீரனூர் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.