தேவகோட்டை-கண்டதேவி சாலையில் நகராட்சி குப்பையால் துர்நாற்றம்

தேவகோட்டை அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை கோரி சனிக்கிழமை அப்பகுதி மக்ககள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.    

தேவகோட்டை அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை கோரி சனிக்கிழமை அப்பகுதி மக்ககள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.    
தேவகோட்டை-கண்டதேவி சாலையில் உள்ள புதூர்  அக்ரஹாரம் பகுதி அருகே  தேவகோட்டை நகராட்சி சார்பில் திடக்கழிவு  மேலாண்மை மையம்  செயல்பட்டு வருகிறது. 
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த மையத்தில் தேவகோட்டை  நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டுவரப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாக  தரம் பிரித்து உரமாக மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில்,இங்கு கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும், கொசு  உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துவதாகவும்  கூறி அப்பகுதி பொதுமக்கள்  திடக்கழிவு மேலாண்மை மையம் முன்பு சனிக்கிழமை திரண்டனர். 
அப்போது அங்கு நகராட்சி அலுவலர்கள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் திடக்கழிவு மேலாண்மை மையம் முன்பு உள்ள கண்டதேவி சாலையில்  அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
உடனுக்குடன் குப்பைகளை தரம்பிரித்து உரமாக மாற்றி துர்நாற்றம் வீசாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 
இதுகுறித்து  தகவலறிந்து வந்த தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் மருது உள்ளிட்ட போலீஸார் சாலை மறியலில்  ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து விரைவில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com