தென்மேற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் 3 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு மையத்தைச் சார்ந்த 4 மாணவர்களை துணைவேந்தர் சொ. சுப்பையா திங்கள்கிழமை பாராட்டினார்.
இதில் மாணவர் ர. பாலசுப்பிரமணியன் 100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் எ. சிவகவி 100
மீட்டர் பந்தயத்தில் தங்கமும், எ. செல்வராஜ் ஈட்டி எறிதல்
மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும், எ. சிவராஜ் 100 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளர் எம். சுந்தர் ஆகியோரை துணைவேந்தர் சொ. சுப்பையா, பதிவாளர் ஹா. குருமல்லேஷ்பிரபு ஆகியோர் பாராட்டினர். மேலும் துணைவேந்தர் கூறுகையில், சர்வதேச அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு பரிந்துரைப்படி தங்கம் வென்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ. 2 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்றார்.