காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் வங்கிச் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், கோட்டக் கண்காணிப்பாளர் வே. மாரியப்பன் வங்கிச் சேவையை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியது:
இந்திய அஞ்சல் துறை காலத்திற்கேற்றார் போல் தற்போது நவீனமயமாக்கப்பட்டு பிற வங்கிகளின் சேவையைப் போலவே வங்கிச் சேவையை செய்து வருகிறது. தற்போது சேமிப்புக்கணக்கில் குறைந்தது ரூ. 50 மட்டும் இருப்பு வைத்து கணக்கு தொடங்கலாம். கூடுதலாக எவ்விதக் கட்டணமுமின்றி ஏ.டி.எம் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களும் கோர் சிஸ்டம் இன்டகிரேடர் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட உள்ளது என்றார்.
விழாவில், காரைக்குடி அஞ்சல் துணைக் கோட்டக் கண்காணிப்பாளர் கே. விஜயலெட்சுமி, தேவகோட்டை துணைக் கோட்டக் கண்காணிப்பாளர் பி.ஹூசைன்அகமது, காரைக்குடி உபகோட்ட ஆய்வாளர் டென்னிஸ்தாசன், காரைக்குடி தலைமை அஞ்சலக அதிகாரி டி. கல்யாணி மற்றும் அனைத்து அஞ்சல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.