பட்டு நூல் விலையைக் குறைக்கக் கோரி, சத்தியமங்கலத்தில் 250-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் கோவிந்தராஜபுரம், தொட்டம்பாளையம், ரங்கசமுத்திரம், சதுமுகை, நால்ரோடு, பெரியகொடிவேரி, கொண்டையம்பாளயைம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் திங்கள்கிழமை முதல் (தை முதல் நாளில் இருந்து 15-ஆம் தேதி வரை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும், பட்டு நூல் விலை அதிகரித்துள்ளதையும் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால், சத்தியமங்கலம் பகுதியில் நெசவாளர்கள் நெசவுத் தறியை நிறுத்தியுள்ளனர்.
அண்மைக் காலமாக நெசவுத் தொழிலாளர்கள் போதிய வேலையின்மை காரணமாக
பொருளாதார ரீதியாக பெரும் பிரச்னையை சந்தித்துள்ளனர். பட்டு நூல் விலையை உயர்த்தியதால் போதிய வேலை கிடைப்பதில்லை. நீண்ட நாள்களாக உயர்த்தப்படாத கூலியை உயர்த்த வேண்டும்.
60 வயது நிறைந்த நெசவாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்க வேண்டும்.
கைத்தறிவு நெசவுகளுக்கு தற்போது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி பட்டு நெசவுக்கு மூலப் பொருளான பட்டு நூல் விலை 6 மாதத்தில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதைக் கண்டித்து நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தால் நெசவுத் தொழில் முடங்கியுள்ளது.