சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே குடும்பத் தகராறில் தாய், 2 மகள்கள் விஷம் குடித்த வழக்கில் கணவரை காளையார்கோயில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காளையார் கோவில் அருகேயுள்ள குருந்தனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு தாரணி (7), சிவானி(5) ஆகிய 2 மகள்கள். ஆறுமுகம் அதே பகுதியில் உள்ள கோழிக்கறி கடையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். அவர் தினமும் மது அருந்தி வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரியும் அவரது இரு மகள்களும் விஷம் குடித்தனர். பின்னர் மூவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து ராஜேஸ்வரியின் தந்தை ராமு அளித்தப் புகாரின் பேரில் காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜேஸ்வரியின் கணவர் ஆறுமுகத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.