சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வரும் மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் க.சகுந்தலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம் ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுதிறனாளிகள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றுடன் இணைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மே 30 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.