கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திங்கள்கிழமை (மே 28) மதுரையில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் சிவகங்கை கோட்டச் செயலாளருமான எஸ்.செல்வன் மானாமதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையைற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் இப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் அஞ்சலகங்களில் நடைபெறும் வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி 5 நாள்களாகியும் மத்திய அரசு கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யவில்லை. இதையடுத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மதுரையில் வரும் 28 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
இப்போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஏராளமான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.