பட்டாசு கடைக்கு தடையில்லாச் சான்று வழங்க சனிக்கிழமை ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்தவர் சகாய அருள் (42). இவர், காளையார்கோயிலில் உள்ள பேருந்து நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் பட்டாசு கடை வைப்பதற்காக தடையில்லாச் சான்று கோரி கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து, ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் தடையில்லாச் சான்று கிடைக்கும் என சிவகங்கை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் லோகிதாஸ் தெரிவித்தாராம். இதுகுறித்து, சகாய அருள் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.
இப்புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சகாய அருளிடம் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை கொடுத்து அனுப்பினர். சகாய அருள் அந்த பணத்தை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் இருந்த அலுவலக கார் ஓட்டுநர் முத்துக்குமாரிடம் கொடுத்து, தீயணைப்புத் துறை அலுவலர் லோகிதாஸிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர் பணத்தை வழங்கும்போது, அங்கு மறைந்திருந்த சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவல் ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான போலீஸார் தீயணைப்புத் துறை அலுவலர் லோகிதாஸ் (48) மற்றும் கார் ஓட்டுநர் முத்துக்குமார்(42) ஆகிய
இருவரையும் கைது செய்தனர்.