சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த திருப்பணிக் கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.
மானாமதுரையில் வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில். சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக் கோயிலில் சோமநாதர் சுவாமி சன்னதியில் கருங்கற்கலால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் சேதம் ஏற்பட்டது. அதன்பின் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி திரட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது.அறக்கட்டளை நிர்வாகிகள் தொடர் முயற்சியால் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு, திருப்பணி வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சோமநாதர் சன்னதி மண்டபம் முழுவதும் புதிய கருங்கற்கலால் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கோயில் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் ஆகியவையும் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. தற்போது திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.