விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முத்தால் நகரில் வாருகால் சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால் நகர், கேகேஎஸ்என்என் நகர், காந்தி நகர், அண்ணா நகர், ஜக்கம்மாள்புரம் ஆகியன உள்ளன. இப்பகுதியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், முத்தால் நகர் பகுதியில் அதிகளவு கூலி தொழிலாளர்களே வசித்து வருகினறனர். இப்பகுதி பிரதான சாலையில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வாருகால் சிதைந்து விட்டதால், ஆங்காங்கு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், மழைக் காலங்களில் கழிவுநீர் மழை நீருடன் சேர்ந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து உருவாகும் கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சேதமடைந்த வாருகாலை சீரமைத்து, கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.