இணையதளம் வாயிலாக பத்திரம் பதிய வேண்டும் என, விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சியில் கூடுதல் பத்திரப் பதிவு தலைவர் கே.வி. ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் பரிட்சார்த்தமாக இணையதளம் மூலம் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.
இம்முறையை அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கு இணையதளம் வாயிலாக பத்திரப் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து கணினி மூலம் பயிற்றுனர்கள் விளக்கினர்.
இதை நடைமுறைக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர். இந்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாமில் ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.