சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலநாட்சியார்புரத்தைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி வைரமுத்து(38). இவர், சம்பவத்தன்று செங்கமலநாட்சியார்புரம்-திருத்தங்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒருவர் அவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி, பையில் வைத்திருந்த பணம் ரூ. 1150 வழிப்பறி செய்து கொண்டு தப்பியோடியுள்ளார். அப்போது, வைரமுத்து கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் மர்ம நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்த உதயக்குமார் (17) எனத் தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உதயக்குமாரை கைது செய்தனர்.