சாத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகோரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காமராஜபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்பயிற்சி மையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு குடிநீர்,கழிப்பறை, இருக்கைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.மேலும் அரசு தரப்பில் வழங்கபடும் உதவிதொகையும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என இங்கு பயிலும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பயிற்சி மைய பயிற்றுநர்களிடமும்,முதல்வரிடமும் பலமுறை தெரியபடுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வெள்ளிகிழமை காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்து தொழிற்பயிற்சிமைய நூழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அரசு தொழிற்பயிற்சி மைய(பொறுப்பு) முதல்வர் நீலாவதி, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,மாணவர்களுக்கு அடிப்படை வசதி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வகுப்புகள் வழக்கம் போல் இயங்கின.