சிவகாசி வட்டம், மங்களம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பயன்படும் வகையில், தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மங்களம் கிராமத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் தலைமை வகித்தார்.
இதில், வட்டாட்சியர் ஸ்ரீதர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி த்துணை வட்டாட்சியர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில், மங்களம், எம்.புதுப்பட்டி, நெடுங்குளம், ஈஞ்சார், கிருஷ்ணபேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 370 பேர் உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். தகுதியுள்ள மனுக்களுக்கு விரைவில் உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற முகாம் டிசம்பர் 14 ஆம் தேதி சல்வார்பட்டியில் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.