சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் திங்கள்கிழமை பாரதி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கல்லூரியின் தமிழியல் துறை, சங்கப்பலகை இலக்கியமன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர்கள் பெ.கி.பாலமுருகன், இரா.முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தமிழியியல் துறை உதவிப் பேராசிரியர் ரா.விஜயபிரியா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் பாரதியாரின் கனவுகளை நனவாக்க வேண்டும்.தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் நேசிக்க வேண்டும். அச்சமில்லை. அச்சமில்லை என பாரதியின் கவிதையை மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் தைரியமாக செயல்பட வேண்டும் என்றார்.
கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரதி குறித்து கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் ஏ.பி.செல்வராஜன் பரிசு வழங்கினார். மாணவி மு.மகேஸ்வரி வரவேற்றார்.
மாணவர் புவனேஸ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை துறைத்தலைவர் அமுதா செய்திருந்தார்.