சாத்தூரில் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய்த் துறை சார்பில் படந்தால் குறுவட்ட பகுதிகளுக்கான உழவர் பாதுகாப்புத் திட்டம் முகாம் நடைபெற்றது. படந்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்ட முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியர் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேட்டமலை, இ.குமாரலிங்காபுரம், வடமலாபுரம், சிந்தபள்ளி, சின்னகாமன்பட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளைச் சேர்ந்த 2,506 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு புதிதாகச் சேர்க்கபட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டைகளும் வழங்கபட்டது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களில் 39 பேருக்கு கல்வி உதவி, இரண்டு பேருக்கு திருமண உதவி உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். முகாமில், அனைத்து குறுவட்ட பகுதிகளைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.