வயதுக்குள்பட்ட மாணவர்கள் சைக்கிள் மட்டுமே ஓட்டலாம், பைக்குகளை ஓட்டக் கூடாது என சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் கூறினார்.
சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2வில் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மற்றும் மாநில அளவில் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம்,விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுபள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் பாராட்டுப் பெற்றனர். நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தலைவர் ஆர்.வி.மூனீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ரத்தினசேகர் வரவேற்றார்.
விழாவில், சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளர் வி.கண்ணன் சிறப்புரையாற்றி பேசியதாவது: இதுபோன்ற பாராட்டுக்கள் மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். 18வயது பூர்த்தியடையாத மாணவர்கள் சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருசக்கரவாகனம் ஓட்டக்கூடாது. சாலைவிதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்லிடப்பேசி, இணையதளம் உள்ளிட்டவைகளை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது. படிப்பு ஒன்றையே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி தாளாளர் ஆர்.சோலைச்சாமி மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.சுரேந்திரன், வட்டாரத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் எஸ்.பி.செல்வராஜ் நன்றி கூறினார்.