தமிழகத்தில் காங்கிரஸ் எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருந்துகொண்டிருக்க முடியாது என விருதுநகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் காமராஜரின் 115 வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் பேசியது: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் விவசாயம், தொழில் புரட்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்தியவர். தமிழகத்தில் 14 ஆயிரம் பள்ளிக் கூடங்களை திறந்தது மட்டுமல்லாமல், இரண்டு பிரதமர் களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
நான் பாஜகவை விட்டு விலகிய போது மைத்ரேயன் உள்ளிட்ட பலர் என்னை அதிமுக வில் சேர அழைத்தனர். ஆனால், நான் மறுத்து விட்டேன். ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக மூன்றாக உடைந்து விட்டது. கட்சியும், ஆட்சியும் பலவீனப்பட்டதால், மத்தியில் ஆளும் பாஜ விற்கு பயப்படுகிறார்கள்.
தமிழகத்தில் விரைவில் 30 லட்சம் காங்., உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அதனால் எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்க வைத்து சில அமைச்சர் பதவிகளையாவது நாம் பெற வேண்டும் என்றார் அவர்.