விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் ஒரு நாள் முழுதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதால் இரவு முழுதும் அவதிப்பட்ட கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பலத்த காற்று வீசியுள்ளது. இதனால், அக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் தடை பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் மின்சாரத்தை சரி செய்ய வரவில்லையாம். இதனால், குடியிருப்புவாசிகள் அனைவரும் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்துள்ளனர்.
இதுகுறித்து, சனிகிழமை காலை மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னரும் மின் தடையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், சனிக்கிழமை விருதுநகர்-அழகாபுரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால், அவ்வழியே பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. தகவலறிந்து வந்த ஆமத்தூர் காவல்துறையினர் மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.