விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் முதல் வார்டுக்கு உள்பட்ட பரங்கிநாதபுரம் பகுதியில், அண்மையில் மின் கம்பம் பழுது காரணமாக வீடுகளில் திடீரென மின்தடை ஏற்பட்டதால், மின்சார வாரிய புகார் புத்தகத்தில் குறிப்பிட்டனர். இதையடுத்து, பரங்கிநாதபுரம் சென்ற மின் வாரிய ஊழியர்கள், அங்குள்ள பழுதடைந்த மின் கம்பத்தில் ஏறி அதை சரி செய்ய மறுத்தினராம். இதனால், பல நாள்கள் மின்சாரம் இன்றி தவித்துக்கொண்டிருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே போன்று விருதுநகர் பாத்திமா நகர், காமராஜர் புற வழிசாலை, சாத்தூர் செல்லும் சாலை பகுதிகளிலும் உடைந்த மின் கம்பங்களை சீரைமக்க கோரி அப்பகுதி குடியிருப்போர் சார்பில் மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், திருச்சுழி மற்றும் காரியாபட்டி பகுதியில் சூறை காற்று காரணமாக ஏற்கெனவே மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதில் உள்ள மின் கம்பிகள் கைகளால் எட்டி பிடிக்கும் அளவிற்கு தாழ்வாகச் செல்வதால் எந்த நேரமும் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்னர், மாவட்டம் முழுவதும் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.