செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிப் பகுதியில் உள்ள கால்நடை மேய்ச்சலுக்கான இடத்தில் கொட்டப்படுகின்றன.
இப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், மேய்ச்சலுக்கான இடத்தில் குப்பைகள் கொட்டுவதால், கால்நடைகளுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின்நிலையம், கண்ணகி காலனி, சத்யா நகர்ஆகியன உள்ளன. இங்கு, 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
மேய்ச்சல் நிலத்தில் தினமும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதுடன், சில நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, கால்நடைகளின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் கருதி, இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.