வேறு மாநில நரிக்குறவர்களை விடியோவில் பதிவேற்றம் செய்து குறவர் எனப் பெயரிட்டு சமூக வலைத் தளங்களில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜபாளையம் வடக்குக் காவல் நிலையத்தில் பழங்குடியினர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன் ஸ்ரீ அரசு என்பவர், உளுந்தூர் பேட்டையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நரிக் குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்களைப் பற்றி விடியோ பதிவேற்றம் செய்து, அதற்கு குறவர்கள் வாழிடம் என தவறாகப் பெயர் சூட்டி, சமூக வலைத் தளமான யூ டியூபில் பரவவிட்டுள்ளாராம்.
ஆனால், அந்த மக்களுக்கும், தமிழகத்தில் குறிஞ்சி நிலம் என்றழைக்கப்படும் மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் தங்களுக்கும் சிறிதளவும் ஒற்றுமை கிடையாது. அவர்களது மொழி, பழக்க வழக்கம் போன்றவை தங்களுடைய பழக்கத்துக்கு சிறிதளவும் பொருந்தாது.
எனவே, பொது மக்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத் தளங்களில் தவறான தகவலை பரவவிட்டுள்ள பொன் ஸ்ரீ அரசு என்பவரை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பழங்குடியினர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மலையரசன் மக்கள் இயக்கம் சார்பில், ராஜபாளையம் வடக்குக் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முருகேசன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜேசுவிடம், இரு பிரிவினருக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து படங்கள் மூலம் விளக்கினார்.
மேலும், இரு மாநிலத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களை ஒரே கோணத்தில் பார்ப்பதால், தமிழக அரசிடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் பெறுவதில் பிரச்னை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அதேபோல், ஆபாச நடனங்களுக்கு குறவன்-குறத்தி ஆட்டம் எனப் பெயரிட்டு, தங்கள் சமுதாயத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதி அளித்தார்.