பட்டா வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுக்கான ரசீதை மாலையாக அணிந்து வந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கி ழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஒருவர் மனு அளித்தார்.
இது குறித்து, விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
எனக்கு, கூரைக்குண்டு கிராமத்தில் 9.45 சென்ட் வீட்டடி மனை உள்ளது. இதற்கு, பட்டா வழங்கக் கோரி பலமுறை விண்ணப்பித்து விட்டேன். நில அளவையாளரும் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்துவிட்டார். அதன்பின்னரும், எனக்கு பட்டா வழங்கப்படவில்லை.
மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து 15 முறை மனு அளித்துவிட்டேன். ஆனாலும், வருவாய்த் துறையினர் பட்டா வழங்க மறுக்கின்றனர். அரசு சார்பில் கட்டப்படும் இலவச வீட்டுக்கு பட்டா தேவைப்படுவதால், என்னால் அங்கு வீடு கட்ட முடியவில்லை.
எனவே, எனக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.