விருதுநகரில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது விருதுநகர் நகர் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, பி. ராஜா, ராஜேஸ்வரி, ஏ. பச்சைமணி பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இம் மாநாட்டை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெ.ஜே. சீனிவாசன் தொடக்கி வைத்துப் பேசினார்.
மாநாட்டில், விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மிகவும் மெதுவாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் நகராட்சியில் சொத்து வரியை உயர்த்துவதோடு, ஆறரை ஆண்டுகளுக்கு முந்தைய வரிகளையும் நிலுவையுடன் வசூலிக்க வேண்டும் என்ற முடிவை ரத்து செய்யவேண்டும். வி.எம்.சி. காலனியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். கல் கிடங்கில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். நகராட்சியில் நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்களை நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்டக் குழு உறுப்பினர் தேனி வசந்தன் வரவேற்றார்.