அருப்புக்கோட்டை அருகே கிராமப் பள்ளியில் திங்கள்கிழமை இரவு ரூ. 12, 600 திருடப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளியின் அலுவலரும் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி அலுவலகத்தைத் திறக்க வந்துள்ளனர். அப்போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்ததில், அலுவலகப் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் பள்ளி மாணவர்களின் சிறுசேமிப்பு பணமான ரூ. 12.600 திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு காவல் மோப்ப நாயுடன் வந்த போலீஸார், அங்கு சோதனையிட்டனர். பின்னர், தடயவியல் நிபுணர் கைரேகைகளை பதிவு செய்தார். இது குறித்து பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.