விருதுநகர் அருகே உள்ள காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பாலிமர் துறை மூலம் சிறப்பான பயிற்சி அளித்ததற்காக, அக்கல்லூரிக்கு புதுதில்லி ரப்பர் ஸ்கில் டெவலப்மென்ட் கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை, கல்லூரி சார்பாக முதல்வர் ஆனந்த் ஆச்சாரி, பாலிமர் துறை தலைவர் காந்தி ஆகியோர் பெற்றனர். உலகெங்கிலும் ரப்பரின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, இதற்கான தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன. இதில் பணிபுரிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் அமைவது கடினமாக உள்ளது. இதை சீர்படுத்தும் நோக்கில், புதுதில்லியில் உள்ள ரப்பர் ஸ்கில் டெவலப்மென்ட் கவுன்சில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறது. இதனுடன், காமராஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
விருது பெற்ற பாலிமர் துறைக்கு, கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்லூரித் தலைவர் தீனதயாளன், துணைத் தலைவர் தர்மராஜன், கல்லூரிச் செயலர் மகேஷ்குமார், இணைச் செயலர் பெரியசாமி, பொருளாளர் பிரசாந்த் குமார், கல்லூரி டீன் சாருகேசி மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.