சிவகாசியில், மூலப் பொருள்களின் விலை உயர்வால் 2018- ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
சிவகாசியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்படுகிறன்றன. இங்கு தயாராகும் தினசரி காலண்டர்கள் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் காகிதம், காகித அட்டை உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ளதால் தினசரி காலண்டர்களின் விலையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் கூறியதாவது: அச்சுக் காகிதம் ஒவ்வொரு ஆண்டும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு தினசரி காலண்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் ஆர்டர் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் தினசரி காலண்டர்களுக்கு வரி இல்லை. குறைந்த விலையில் ஆண்டு முழுவதும் மக்களிடம் விளம்பரத்தை எடுத்துச் செல்வது தினசரி காலண்டர்களே. எனவே இதற்கு ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது மின்தடை எதுவும் இல்லை. எனவே காலண்டர் தயாரிப்பில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
2018 ஆம் ஆண்டுக்கு வணிக நிறுவனங்கள் 85 சதவீதமும், அரசியல் பிரமுகர்கள் 15 சதவீதமும் ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார்.